நகரங்களில் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற சூழலில் அதை எதிர்கொள்ள 50க்கும் மேற்பட்ட நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஆட்சியாளர்கள், அந்தத் திட்டத்தை முறையாகச் செயல்பட விடுவார்களா? ஊழல் செய்தே பழக்கப்பட்ட அதிகாரவர்க்க அமைச்சர்களின் உதவியோடு கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டுவது தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிற ஒன்றுதான்.
உதாரணமாக ஈரோடு மாநகராட்சியை எடுத்துக்கொண்டால் 2008இல் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது. ஈரோடு முழுவதும் தெருத்தெருவாக 500 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் அமையும் இந்த பாதாள சாக்கடை திட்டத்தின் மொத்த மதிப்பு 210 கோடி ரூபாய். திட்டத்தை 5 பகுதிகளாகப் பிரித்து டெண்டர் விடப்பட்டது. அதில் இரண்டு திட்டங்கள் மட்டும் முடிவானது. இதில் ஒரு திட்டத்தை ஐதராபாத்திலுள்ள கே.ஆர்.ஆர். நிறுவனம் எடுத்தது. இதன் மதிப்பு 60 கோடி ரூபாய். ஜனவரி 2013க்குள் இத்திட்டம் முடிந்திருக்க வேண்டும். இந்தப் பின்னணியில்தான் ஊழல்வாதிகள் உள்ளே நுழைந்தனர்.
திட்டத்தை முடிக்கவேண்டிய ஜனவரி 2013இல் 50 சதவிகித வேலைகள் முடிந்துவிட்டன. அதாவது, திட்ட மதிப்பான 60 கோடி ரூபாயில், 23 கோடி ரூபாய்க்கான வேலைகள் முடிக்கப்பட்டன. மீதி 37 கோடி ரூபாய்க்கான வேலைதான் பாக்கி, இதை முடிக்க ஈரோடு மாநகராட்சி கமிஷனர் விஜயலட்சுமியையும், புராஜக்ட் இன்ஜினியர் ஞானமணியையும் சந்தித்த ஒப்பந்தக்காரர் 18 மாத அவகாசம் கேட்டார். அதற்கு கைமாறாகப் பெரும் தொகை எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்பு கடினமாக இருந்ததால், இறுதியாக6 மாத அவகாசம் தந்தனர். ஆனால், பணி முடியாத காரணத்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
மேற்குறிப்பிட்ட எஞ்சிய 37 கோடி ரூபாய் வேலைக்கு ரூ.54 கோடி என உயர்த்தி புதிய டெண்டர் அறிவிப்பு வெளியானது. இதில் 10 சதவிகிதம் கூடுதலாக வைத்து ரூ.60 கோடிக்கு டெண்டர் கோருவதும், பிறகு திட்ட மதிப்பீட்டை ரூ.60 கோடி உயர்த்துவதும் நடைபெற்றது. தொடக்கத்தில் மொத்தத் திட்ட மதிப்பீடு 60 கோடி ரூபாய் என்றிருந்தது. இதில் 23 கோடி ரூபாய் வேலை முடிந்தது. எஞ்சிய வேலைக்குத் திட்ட மதிப்பீடு 37 கோடி ரூபாய்தான். ஆனால், திட்ட மதிப்பீடு விடுபட்ட பாதி வேலைக்கு ரூ.65 கோடி என மறுமதிப்பீடு செய்து, புதிய ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 20.5 கோடி ரூபாய் அதிகமாகச் செலவிடுவதன் மர்மம் என்ன? 18 மாத அவகாசத்தைத் தர மறுத்த மாநகராட்சி புதிய கான்ட்ராக்டருக்கு 30 மாத அவகாசம் தந்தது ஏன்? இதில் மறைந்துள்ள
மர்மம் என்ன? இதில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கைமாறியது? அன்றைய உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமியின் பங்கு என்ன?
பாதாள சாக்கடை ஊழலால் ஈரோடு நகரமே சிரிப்பாய் சிரித்து வருகிறது. இதில் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை எனவே, ஈரோடு மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தில் கொள்ளை அடித்ததைப்போல, தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் அடித்த கொள்ளை எத்தனை கோடி? இதுகுறித்து விசாரணை மேற்கொண்டால் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும்.

No comments:
Post a Comment