தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த 7.1.2016 அன்று அரசாணை மூலம் அனுமதி வழங்கியது. இதற்காக முயற்சியெடுத்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை பாராட்டினேன். ஆனால் அதேநேரத்தில் கடந்த மே 2014 இல் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து அளித்த தீர்ப்பை மத்திய அரசு அரசாணை மூலம் நடத்துவதற்கு சாத்தியமா என்கிற சந்தேகம் இருந்தது. எப்படியோ, எந்த வகையிலோ ஜல்லிக்கட்டு நடந்தால் போதும் என்கிற வகையில் எனது கருத்தை வெளியிட்டிருந்தேன்.
ஆனால் இன்று உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது. இதுபோன்ற ஒரு தடை வரும் என்று பா.ஜ.க.வினர் எதிர்பார்க்கவில்லை என்று கூற முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மாற்றுகிற வகையில் சில கட்டுப்பாடுகளோடு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கடந்த 18 மாதங்களாக மத்திய பா.ஜ.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன ? தமிழக பா.ஜ.க. இதற்காக எடுத்த முயற்சிகள் என்ன ? கடைசி நேரத்தில் ஓர் அரசாணையை பிறப்பித்துவிட்டு நீதிமன்ற தடையாணையும் வந்துவிட்ட நிலையில் பா.ஜ.க.வினரின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.
ஒருபக்கம் பசுவதை தடைச் சட்டம். மறுபக்கம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு என்கிற நிலையை பா.ஜ.க.வின் தலைமை பொறுப்பிலே இருக்கிறவர்கள் எதிர்ப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான் இன்றைக்கு ஜல்லிக்கட்டுக்கு மிகப்பெரிய சோதனை நீதிமன்றத்தாலே ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மத்திய – மாநில அரசுகள்தான் முழு பொறுப்பேற்க வேண்டும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டத்தின் மூலமாக உடனடியாக உரிய நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

No comments:
Post a Comment