தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை-15.09.2015 - INCTamilNadu

Recent

Wednesday, July 4, 2018

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை-15.09.2015


இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியோடு ஆங்கிலமும் தொடர்ந்து நீடிக்கும் என்கிற நேருவின் உறுதிமொழிக்கு மாறாக ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை குறைப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறது. இந்நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் இந்தி பேசாத மக்களிடையே பெரும் கொந்தளிப்பு உருவாகும். 

டெல்லியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் மத்திய அரசு ஊழியர்கள் இந்தியில் கையெழுத்திட வேண்டும் என்று பேசியிருப்பது இந்தி பேசாத மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் உருவாக்கியிருக்கிறது. இந்தி மொழிக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காமல் சில அறிவுஜீவிகள் ஆங்கிலத்தை முன்னிலைப்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இத்தகைய பேச்சின் மூலம் இந்தி பேசாத மக்களுக்கு பண்டித நேரு அவர்கள் வழங்கிய உறுதிமொழியை உதாசீனப்படுத்தியிருக்கிறார். 

தமிழ்நாட்டு மக்கள் மீது இந்தி திணிக்கப்படுகிறது என்கிற அச்சத்தின் காரணமாக எழுந்த போராட்டத்தின்போது பண்டித நேரு அவர்கள், ‘இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக தொடர்ந்து நீடிக்கும். இந்நிலை எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பதை தீர்மானிக்கிற பொறுப்பை இந்தி பேசும் மக்களிடம் விடாமல் இந்தி பேசாத மக்களிடையே விடுவேன்” என்று அன்று மக்களவை உறுப்பினராக இருந்த சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் மூலம் உறுதிமொழியாக தெரிவித்தார். அதற்கு பின்பு இந்த உறுதிமொழியின் அடிப்படையில் ஆட்சி மொழிகள் சட்டம் திருத்தம் செய்யப்பட்டு, இந்தி பேசாத மக்களுக்கு பாதுகாப்பு கவசமாக இது அமைந்திருக்கிறது. இதை தகர்க்கிற வகையில் பா.ஜ.க.வினர் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும், இந்தியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ திணிப்பதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்வதை வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன். 

அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சம உரிமையும், சமவாய்ப்பும் கொடுப்பதற்கு மாறாக இந்தி மொழிக்கும், சமஸ்கிருத மொழிக்கும் பெருமளவு நிதியை ஒதுக்கி, பரப்புவதற்கு முயற்சி செய்வது மத்திய பா.ஜ.க. அரசின் தமிழ் மொழி விரோத போக்கையே வெளிப்படுத்தி வருகிறது. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியோடு ஆங்கிலமும் தொடர்ந்து நீடிக்கும் என்கிற நேருவின் உறுதிமொழிக்கு மாறாக ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை குறைப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறது. இந்நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் இந்தி பேசாத மக்களிடையே பெரும் கொந்தளிப்பு உருவாகும் என்று மத்திய அரசை எச்சரிக்கிறேன்.

No comments:

Post a Comment

Pages