தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை - INCTamilNadu

Recent

Thursday, July 5, 2018

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை


தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தி ஒன்பதரை ஆண்டுகாலம் பொற்கால ஆட்சி நடத்திய பெருந்தலைவர் காமராஜரின் 115 ஆவது பிறந்தநாள் விழா வருகிற ஜுலை 15 அன்று கோலாகலமாக கொண்டாடுவது தமிழ் மக்களின் கடமையாகும். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இலவச கல்வி, மதிய உணவு வழங்கி கல்வியில் புரட்சி செய்தவர் பெருந்தலைவர் காமராஜர். சேர, சோழ, பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்களெல்லாம் காமராஜர் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததாக தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டதை எவரும் மறந்திட இயலாது. அத்தகைய சாதனைகளை புரிந்த பெருந்தலைவர் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைப்பதே காங்கிரசின் குறிக்கோளாகும். பெருந்தலைவர் ஆட்சி என்பது எளிமையான, நேர்மையான, தூய்மையான, ஊழலற்ற, மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற ஆட்சி முறையாகும். இத்தகைய ஆட்சி முறையை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவர வேண்டுமென காங்கிரஸ் விரும்புகிறது.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, மக்கள் நலனில் அக்கறை இல்லாத, ஊழல் செய்வதை நோக்கமாக கொண்ட ஆட்சி என்பதை எவரும் மறுக்க முடியாது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற முடியாது என்கிற நிலையில் ஆட்சி எவ்வளவு காலத்திற்கு நீடிக்கிறதோ, அதற்குள்ளாக தமிழகத்தை வளர்க்காமல், தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமென அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் நலனுக்கு விரோதமான அ.தி.மு.க. அரசு அகற்றப்பட்டு காமராஜர் ஆட்சி முறையைப் போல செயல்படுகிற ஒரு ஆட்சி தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டுமென்பதே பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் அனைவரும் எடுக்க வேண்டிய சூளுரையாகும். 

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா அவர் பிறந்த ஊரான விருதுநகரில் ஜூலை 15 ஆம் தேதி மாலை கோலாகலமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தென்மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் விருதுநகரில் நடைபெறும் விழாவில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாட ஜூலை 15 இல் விருதுநகரில் கூடுவோம்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை ஏழைஎளிய மக்களின் நலன்காக்கும் நாளாகவும், கல்வி எழுச்சி நாளாகவும் கொண்டாட வேண்டும். மாணவ-மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவச் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்தும், மற்ற இடங்களில் அவரது திருவுருவப் படத்தினை அலங்கரித்து வைத்து மலர் தூவி மரியாதை செய்தும், இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடுமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், என் சார்பிலும் வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

Pages